சிறுபாணாற்றுப்படையில் நிலப்பாகுபாடும் பண்பாடும்
Abstract
நிலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பகுக்கப்பட்ட நிலப்பரப்பு நிலத்திணைகள் எனப்பட்டன. தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நான்கு வகை நிலத்திணைகளைக் கொண்டது. எனினும் முல்லையும் குறிஞ்சியும் தன் இயல்பிலிருந்து திரிந்து பாலை என்கின்ற வடிவத்தைப் பெறும் போது அது ஐந்தாவது நிலமாக கொள்ளப்பட்டது. இத்தகைய நிலப் பாகுபாடுகள் இயல்பின் அடிப்படையில் மட்டும் அமையாமல் மக்களின் வாழ்வியலோடு இணைந்தவையாகவும் அமைந்திருந்தன என்பதற்குச் சான்றாக சங்க இலக்கியங்கள் அமைகின்றன. குறிப்பாக ஆற்றுப்படை இலக்கியங்கள் குறிப்பிடும் நிலப்பாகுபாடுகள் பரந்து பட்டனவாக அமைந்திருந்தன என்பதை சிறுபாணாற்றுப்படையின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. சிறுபாணாற்றுப்படையில் ஆற்றுப்படுத்த முயலும் பாணன், அரசன் நல்லியக்கோடனின் ஆட்சிக்குட்பட்டு விளங்கிய நிலப்பரப்புகளையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் நிலையையும் உணவுமுறை பற்றியும் விருந்தினர்களை உபசரிக்கின்ற பாங்கும் பண்பாடாக விளக்கப்பட்டுள்ளன. கட்டுரையில் ஆமூர், வேலூர், எயிற்பட்டினம், என்னும் நிலப்பரப்புகள் நல்லியக்கோடனின் ஆட்சியின் கீழ் இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனைப் புகழ்ந்து பாடி, பரிசில் பெற்ற பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமையப் பெறுகிறது. குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக் காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்லவேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மட்டும் கூறாது மூவேந்தர்களின் தலை நகரான வஞ்சியும் உறையூரும் மதுரையும் எடுத்துக்கட்டிய்ள்ளார்.